புல்டோசருடன் ராமநவமி ஊர்வலம்; போலீஸ் அனுமதி மறுப்பால் மறியல்

பரேலி : உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்த ராமநவமி ஊர்வலத்தில், 'புல்டோசர்' கனரக இயந்திரமும் இடம்பெற்றதால், சர்ச்சை எழுந்தது.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமநவமியை முன்னிட்டு பரேலியில் உள்ள பரித்பூர் என்ற இடத்தில், ஆதர்ஷ் ராம்லீலா கமிட்டி என்ற பா.ஜ., ஆதரவு அமைப்பினர் சார்பில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடந்தது.

அதில், புல்டோசர் இயந்திரமும் இடம்பெற்றது. அதை பார்த்த போலீசார், ஊர்வலத்தில் புல்டோசர் இடம்பெறக் கூடாது என கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வினர் மறியல் செய்தனர். கடந்த ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக, ராமநவமி ஊர்வலத்தில் புல்டோசர் இயந்திரம் எடுத்துச் செல்லப்படுவதை, போட்டோ ஆதாரங்களுடன் போலீசாரிடம் விளக்கினர்.

இதையடுத்து, புல்டோசர் இயந்திரத்துடன் ஊர்வலம் செல்ல, பா.ஜ.,வினருக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

Advertisement