மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்

4

கொழும்பு: தமிழகத்தின் ராமேஸ்வரம் - இலங்கையின் மன்னார் இடையே மீண்டும் படகு சேவை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய பிரதமருடன் நீண்ட நேரம் பேசியதாக மன்னாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்து உள்ளார்.



மன்னார் பஜார் பகுதியில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளாட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் இலங்கை அதிபர் பேசியதாவது: ராமேஸ்வரம் மன்னார் இடையான படகு சேவையை மீண்டும் தொடங்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின் போது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.


இந்திய அரசு உதவியுடன் மன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.


மன்னர் பேச்சாளை கடல் பகுதி வளம் மிக்க கடல் பகுதி என்பதால், கடல் வளங்கள் ஒரு சிலரால் சூறையாடப்படுகிறது. எனவே இது தொடர்பாக அரசு முறை பயணமாக இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசி உள்ளேன் விரைவில் தீர்வு எட்டப்படும்.


மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு,சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement