கண்மாயில் கோழி கழிவுகள் குறைதீர் கூட்டத்தில் புகார்

திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்தது. சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் புறப்பனுார் விவசாயி ஜெயக்குமார் பேசுகையில், ''மேல உரப்பனுார் கண்மாயில் கோழிப் பண்ணை கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதனால் தண்ணீர் மாசடைந்து, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை கொட்டாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

விவசாயி முத்துப்பாண்டி பேசும் போது, ''மேல உரப்பனுார் கண்மாய் பகுதிக்கு செல்லும் ரோடு மேடு பள்ளமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்'' என்றார்.

அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க தலைவர் அபெல்மூர்த்தி பேசியதாவது: விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள் வழங்கப்படுகிறது. ஆனால் அக்கருவிகளை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில்தான் வாங்க வேண்டும் என தோட்டக்கலைத் துறையினர் நிர்பந்திக்கின்றனர். அந் நிறுவன பொருட்கள் தரம் இல்லாததாக உள்ளது. விவசாயிகள் விரும்பும் நிறுவனத்தில் கருவிகளை வாங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

''அனைவரது புகார்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என தாசில்தார் சுரேஷ் தெரிவித்தார்.

Advertisement