பேச்சு, பேட்டி, அறிக்கை

1

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர், முருகன் பேச்சு:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை முன்னெடுக்கும் வகையில் தான் இந்தியா முன்னேறி கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பெண் குழந்தைகளின் பங்கு வேகமாக உள்ளது. உலகம் முழுதும் நர்சிங் துறையில் இந்திய மாணவியர் தான் அதிகம் உள்ளனர். பிரதமராக மோடி வருகைக்கு பின், இந்தியாவின் முகம் மாறி இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும், உலக நாடுகளுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை, சமூக கட்டமைப்புகளை மேற்கொள்கிறோம்.

உண்மை தான்... ஆனா, இதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கு வேப்பங்காயாக அல்லவா இருக்கு!




த.மா.கா., தலைவர், வாசன் அறிக்கை:


'பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டாலும், அவற்றின் விலை உயராது' என, மத்திய அரசின், பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மக்களுக்கு பொருளாதார சுமை ஏற்படும்; சாமானிய மக்களும் பாதிக்கப்படுவர். எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வையும் உடனே திரும்ப பெறும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில் இருந்தாலும், விலை உயர்வை வாபஸ் பெறக் கேட்கும் இவரை பாராட்டியே தீரணும்!


தி.மு.க., சட்டத்துறை செயலரும், மூத்த வழக்கறிஞருமான, என்.ஆர்.இளங்கோ பேட்டி:


அரசியல் அமைப்பின்படி, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பும் போதெல்லாம், அதை எதிர்கொள்ள முடியாமல் காலம் கடந்து, சட்டத்தை மீறி, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் சோதனைகள் நடத்தப்படுகின்றன. எப்போதெல்லாம் தமிழகத்திற்காக, குரல் கொடுக்கிறோமோ, அப்போதெல்லாம், தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிக்கின்றனர். மக்கள் நிச்சயம் இதை நிராகரிப்பர்.

இவங்க மடியில் கனமில்லை என்றால், மத்திய அரசின் சோதனைகளுக்கு ஏன் பயப்படணும்?


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:



தொழிலாளர் நலன்களுக்காக நடைமுறையில் இருந்த, 44 சட்டங்களிலும், பல திருத்தங்கள் செய்து, நான்கு சட்டங்களாக, பா.ஜ., அரசு மாற்றியுள்ளது. இந்த புதிய சட்டங்கள் தொழிலாளர்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளை பறிக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்கள், தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கிறது.
தொழிலாளர்கள் உரிமைக்கு குரல் கொடுப்பதில் தவறில்லை... ஆனா, சில தொழிற்சங்கங்கள், நிறுவனங்களை மிரட்டும் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

Advertisement