கோவில் முன் குப்பை குவியல்; பக்தர்கள் முகம் சுழிப்பு

பல்லடம் : பல்லடத்தில், நறுமணத்துக்கு இடையே துர்நாற்றம் வீசும் வகையில், கோவில் முன் குவித்து வைக்கப்படும் குப்பைகளால், பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

பல்லடம், கடைவீதியில், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வாரச்சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. மார்க்கெட் பகுதியில் இருந்து வரும் காய்கறி கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை, இங்குள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு எதிரே கொட்டப்படுகின்றன. இவற்றால், துர்நாற்றம் வீசுவதுடன், கோவிலின் புனிதத் தன்மை கெடுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:

தினசரி மார்க்கெட்டில் இருந்து வரும் அழுகிய காய்கறிகள், பழங்கள், பூ உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளும், கோவிலுக்கு முன், திறந்தவெளியில், மலைபோல் குவித்து வைக்கப்படுகின்றன. இவற்றால், ஈக்கள், புழுக்கள், எலி, நாய்கள், காகம் உள்ளிட்ட பல்வேறு ஜீவராசிகள் வந்து செல்லும் புகலிடமாக இப்பகுதி உள்ளது. கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், கோவில்களின் நறுமணத்தையும், புனிதத் தன்மையையும் கெடுக்கும் விதமாக உள்ளது.

நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்கள் முன் கொட்டப்படும் கழிவுகளால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. திறந்த வெளியில், கோவிலுக்கு முன் கழிவுகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். மாற்று இடத்தில் கழிவுகளை கொட்டவோ; அல்லது கடைகளுக்கே சென்று கழிவுகள் குப்பைகளை சேகரிக்கவோ நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement