பாகிஸ்தான் எல்லை மூடலால் உலர் பழங்கள் விலை உயரும்

புதுடில்லி; அட்டாரி -- வாகா எல்லை மூடப்பட்டுள்ளதால், ஆப்கனில் இருந்து உலர் பழங்கள் இறக்குமதி குறைந்து, இந்தியாவில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக, இறக்குமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவுக்கு பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முக்கிய நாடாக உள்ளது.

பாகிஸ்தானில் இருந்தும் உலர் பழங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி -- வாகா எல்லை மூடப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் தரப்பில், இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும், தன் பகுதி வாயிலாக, மூன்றாவது நாடு வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்தது. சாலை மார்க்கமாக எல்லைகளை மூடியிருப்பதால், ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்கள் வரத்து குறைய உள்ளது. இதனால், இந்தியாவில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

'20% விலை உயரும்'

இறக்குமதியாளர்கள் தரப்பில் தெரிவித்ததாவது:அட்டாரி -- வாகா சாலை மூடலால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்கள் இறக்குமதி நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். முழுதும் இறக்குமதி நிறுத்தப்பட்டதற்கு பின்னர், 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளது. பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகளை பொறுத்தவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து பெற முடியும். இது ஆப்கன் உலர் பழங்களுக்கு மாற்று வழியாக செயல்படும்.இவ்வாறு தெரிவித்தனர்.



வர்த்தகம்

(2024--25 ஜனவரி வரை)ஏற்றுமதி 2,245 கோடி ரூபாய்மொத்த இறக்குமதி: 5,028 கோடி ரூபாய்உலர் பழங்கள் இறக்குமதி: 3,043 கோடி ரூபாய்



அதிக இறக்குமதி

 உலர்ந்த அத்திப்பழம் பெருங்காயம்  குங்குமப்பூ ஆப்ரிகாட்  பிஸ்தா உலர் திராட்சை



(2024--25 ஜனவரி வரை)

Advertisement