உற்பத்தி துறையை முடுக்கிவிட திட்ட வடிவமைப்பு குழு தயார்

புதுடில்லி; இந்தியாவை, உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, உற்பத்தித் துறை முன்னேற்ற திட்டத்துக்கான விரிவான வழிகளை வடிவமைக்க, அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாக, மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், உற்பத்தித் துறை மேம்பாட்டுக்கு வழிமுறைகளை வடிவமைப்பதற்கு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான குழுவை, தற்போது அரசு அமைத்துள்ளது.

நிடி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, தொடர்ச்சியாக மாநிலங்கள் மற்றும் உள்நாட்டு தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறை பங்களிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 17 சதவீதத்தை உற்பத்தித் துறை கொண்டுள்ளது. இதன் பங்கை அதிகரிக்க, அரசு விரும்புகிறது. மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே இக்குழு கொள்கை ஆதரவு, நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு உள்ளிட்டவற்றை வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement