புதுச்சேரியில் 102.9 டிகிரி வெயில் வீடுகளில் முடங்கிய மக்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில், கத்திரி வெயில் துவங்கிய 9ம் நாளான நேற்று 102.6 டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெறித்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால், எப்பொழுதும் பிசியாக இருக்கும் சாலைகள் வெறிச்சோடின.

புதுச்சேரியில் வழக்கமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், சுற்றுச் சூழல் மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு கடந்த ஏப்ரல் 12ம் தேதி 100.4 டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதனால், கத்திரி வெயிலை எப்படி சமாளிக்க போகிறோமோ என மக்கள் புலம்பினர்.

அதன்படியே கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கிய அன்று 100.6 டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெறித்தது. துவக்கமே உக்கிரமாக இருக்கிறதே என மக்கள் அஞ்சினர்.

இந்நிலையில் அன்று இரவு மழை பெய்ததால், அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் குறைந்த மக்கள் ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியிருப்பது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று காலை 9:00 மணிக்கே உச்சி நேர வெயில் போல் சுட்டெறித்தது. இதன் தாக்கம் கிடுகிடுவென உயர்ந்தது. அதிகப்பட்சமாக மதியம் 2:30 மணிக்கு புதுச்சேரியில் 102.6 டிகிரி அளவிற்கு வெயில் பதிவானது. இது, இந்த கத்திரி வெயில் சீசனின் அதிகபட்சமாகும்.

சுட்டெறித்த வெயிலால், சாலைகளில் அனல் காற்று வீசியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மக்கள் வீடுகளில் முடங்கியதால், எப்பொழுதும் பிசியாக காணப்படும் நகரச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து, புதுச்சேரி வானிலை ஆராய்ச்சி துறை, வானிலையாளர் பாலமுருகன் கூறியதாவது:தமிழகத்தின், மேற்கு மாவட்டங்களில் உள்ள வெப்பக்காற்று கிழக்கு திசை நோக்கி வீசுவதால், கடற்கரை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும், கிழக்கில் இருந்து கடற்கரை காற்று நிலப்பரப்பை நோக்கி வீசத் துவங்கியதும், வெயிலின் தாக்கம் குறையும்.

அதன்படி கடந்த 5ம் தேதி முதல் மேற்கு திசை காற்று வேகம் குறைவாக இருந்ததால், கிழக்கு திசையில் இருந்து நிலப்பரப்பிற்கு காற்று வேகமாக பகல் 12 மணிக்கே வரத் துவங்கியது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மேற்கு திசையில் இருந்து வரும் காற்றின் வேகமாக இருந்தது.

இதனால், கிழக்கு திசை காற்று நிலப் பரப்பிற்கு வர தாமதமாவதால், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கம் வரை இதே நிலை தொடரும் என்றார்.

Advertisement