கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!

5

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


கோழிக்கோடு விமான நிலையத்தில் வழக்கம் போல் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரிகில்(35), ரோஷன் பாபு(33) என்ற இருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கூட்டவே அவர்களிடம் விசாரணை நடத்தினர். விமான நிலையத்தை சுற்றி பார்க்கவும், போட்டோ எடுத்துக் கொள்ளவும் வந்திருப்பதாக இருவரும் கூறினர்.


அவர்களின் பதிலால் திருப்தி அடையாத விமான நிலைய போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இருவரையும் தீவிர விசாரணை வளையத்தில் கொண்டு சென்றனர். அப்போது இருவரும் அளித்த தகவல்கள் அவர்களை திடுக்கிட வைத்தது.


அபுதாபியில் இருந்து வரவுள்ள விமானம் ஒன்றில் 18 கிலோ எடையில் உயர்ரக கஞ்சா (இதன் மதிப்பு ரூ.9 கோடி) கடத்தி வரப்படுவதாகவும், அதை பெற்றுக் கொள்ளவே இருவரும் வந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற போலீசார் துரிதமாக செயல்பட ஆரம்பித்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான ரோஷன் பாபுவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அபுதாபியில் இருந்து வரும் பயணி ஒருவர் 14 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உயர் ரக கஞ்சாவை கடத்தி வருவதை கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, குருவியாக செயல்பட்ட அந்த பயணியை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ப்ரிபெய்டு டாக்சி மூலம் தப்பிச் சென்றுவிட்டார். வழியில் டிரைவரிடம் புகைபிடிக்க வேண்டும் என்று கூறி வழியில் வண்டியை நிறுத்தி உள்ளார்.


பின்னர், அவர் வைத்திருந்த பைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார். தகவலறிந்த போலீசார் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை கைப்பற்றினர். தப்பியவரை பிடிக்க ஏதுவாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement