தமிழக போலீசாரின் அணுகுமுறை மிகவும் மோசமாக உள்ளது: வாசுகி 

6

தஞ்சாவூர் : “தமிழகத்தில், போலீசாரின் அணுகுமுறை மோசமாக உள்ளது,” என, மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று, அவர் அளித்த பேட்டி:

நியாயமான விஷயங் களுக்கு போராட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு கூட, தமிழகத்தில் போலீசார் அனுமதி மறுக்கின்றனர்.

வீட்டுச்சிறை



மக்கள் நடமாட்டம் இல்லாத, குறுகலான இடத்தில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறுகின்றனர். இது, எவ்விதத்திலும் நியாயமான நடவடிக்கை இல்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் ஏராளமான கோரிக்கைகளுக்காக, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால், போராட்டத்துக்கு புறப்படும் இடத்திலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்; பின், வீட்டு சிறையில் வைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மோசமான அணுகுமுறை, தமிழக போலீசாரால், சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, கைது செய்யப்படும் போது நன்றாக இருக்கும் கைதிகள், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது எலும்பு முறிவுடன் செல்கின்றனர்.

கழிப்பறைக்கு செல்லும்போது அல்லது தப்பியோட முயற்சிக்கும்போது, தடுக்கி விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாக சொல்கின்றனர்.

இது கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும், மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

டெல்டாவில் துார்வாரும் பணியை, விவசாயத்துக்காக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே முழுமையாக முடிக்க வேண்டும்.

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தின், பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து, அதைச் செயல்படுத்த வேண்டும்.

காலவரையறை



ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூகபொருளாதார பின்புலத்துடன் செய்ய வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது, எந்த அடிப்படையில் எடுக்கப்படும் என்பது குறித்தும் தகவல் சொல்லி இருக்க வேண்டும். காலவரையறையை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement