'எங்க கூட்டணியில் ஓ.பி.எஸ்., இருக்கிறார்' பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி

மதுரை: ''பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அதில் சந்தேகம் எதுவும் இல்லை,'' என, மதுரையில் பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை உறுதிசெய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது, ''எங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது. இன்றுவரை கூட்டணியில்தான் இருக்கிறோம்,'' என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அதில் சந்தேகம் இல்லை. அமித்ஷா சென்னை வந்தது வேறு விஷயம்; அதனால் அன்று அவரை பன்னீர்செல்வம் சந்திக்க முடியவில்லை.

தமிழகத்தில் தேசியக்கொடியேந்தி பா.ஜ., யாத்திரை நடத்தி வருகிறது. திருப்பூர் யாத்திரையில் நானும், முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கிறோம். சட்டசபை தொகுதி வாரியாக யாத்திரையும் நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி படம், தேசியக்கொடி மட்டுமே இடம்பெறும்.

அமலாக்கத்துறை ரெய்டுக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் அங்கு ஏதாவது இருக்கும். பா.ஜ.,வுடன் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும் வைக்காததும் அவருடைய விருப்பம்.

மக்களுக்கு எதிரான தி.மு.க., ஆட்சியை அகற்ற எல்லோரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் 'தொடர்ந்து நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' எனக்கூறியிருக்கிறார். இதனை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான்.

கவர்னருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அரசியல் சாசன பிரிவு 200ஐ அவர்தான் பயன்படுத்த முடியும். 201வது பிரிவை ஜனாதிபதி தான் பயன்படுத்த முடியும். நீதிமன்றத்திற்கு எந்த நீதி வழங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. இவ்வாறு கூறினார்.

மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர் மாநாடு

மதுரையில் வரும் ஜூன் 22ல், முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: வரும் ஜூன் 22ம் தேதி, தமிழ் கடவுள் முருகரின் பக்தர்களை ஒன்று திரட்டி, சங்கம் வளர்த்த மதுரையில் பெரிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்த, மாநில குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்த, மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் பொறுப்பாளராக, எச்.ராஜா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement