10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வில் திடீர் சிக்கல்

4

மதுரை: ஊதியக் குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பணிக்காலம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் 1999 ஜனவரிக்கு பின் ரூ.2800 தர ஊதியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு அடுத்தடுத்து அமல்படுத்திய ஊதியக் குழுக்களின் தவறான நிர்ணயத்தால், ஆண்டு தோறும் வழங்கப்படும் சம்பள உயர்வில் பாதிப்பு எதிரொலித்தது.

இதனால் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச ஆண்டுச் சம்பள உயர்வு(சீலிங்) 2024ல் முடிவுற்றது.

இதனால் இந்தாண்டு முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2026 ஜனவரி முதல் ஆண்டு சம்பள உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுச் சம்பள உயர்வு என்பது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்த சம்பளத்தை2006 முதல் தற்போது வரை 19 ஆண்டுகளாக இழந்து தவிக்கிறோம்.

இதை மீட்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில் 1999 ஜனவரியில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆண்டுச் சம்பள உயர்வு கிடைப்பதிலும் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ள நிலையில் இந்த சிக்கல் இடி மேல் இடியாக விழுந்தது போல் உள்ளது. இதற்கான முரண்பாடுகளை களைய நிதித்துறைக்குத்தான் பொறுப்பு உள்ளது.

ஆண்டுச் சம்பள உயர்வில் உச்சபட்ச சீலிங் பெற்ற ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் தற்போதுள்ள நிதித்துறை அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement