ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி : சி.பி.எஸ்.இ., பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., தேர்வு முறைக்கு மாறிய அரசு பள்ளிகள் முதல் முறையிலேயே சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும், கல்வித்துறை சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. தேர்வு நேரத்தில் ஆசிரியர்களை மாற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாணவர்கள் நன்கு புரிந்து கற்க வேண்டிய முறையாகும். அவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கும், கற்றல் முறையை எளிதாக்குவதற்கும் தனிச்செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும். செயல்படாத மற்றும் விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் பள்ளிகளை தேர்வு செய்து, விருது வழங்குவது போல, அதிக மாணவர்கள் சேர்க்கும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தினால், அரசு பள்ளிகளின் தரம், மாணவர் சேர்க்கை உயரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement