கால்நடைகளை கொண்டு செல்லும் விவசாயிகளிடம் கட்டாய வசூல்

திண்டுக்கல் விவசாய மாவட்டம் என்பதால் விவசாயிகள் தோட்டங்களில் கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். மாட்டுச் சந்தைகளிலிருந்து கன்று குட்டிகளை வாங்கி வளர்த்து அவை பெரிதானதும் சந்தையில் விற்றும் வருகின்றனர்.

நோய் தாக்குதலுக்கு உள்ளான கால்நடைகளை சரக்கு வாகனம் மூலம் கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதும் உண்டு.

இதேபோல் கால்நடைகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் போது போலீசாருக்கு கப்பம் கட்டி செல்வது வாடிக்கை ஆகிவிட்டது. மினி சரக்கு வாகனத்திற்கு ரூ.100, பெரிய வாகனங்களுக்கு ரூ. 200 வசூல் செய்கின்றனர்.

கொடுக்கவில்லை எனில் விலங்குவதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விடுவோம் என கூறுகின்றனர். அச்சம் காரணமாக விவசாயிகள் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முன்பு மாட்டு வண்டிகளில் கால்நடைகளை கொண்டு சென்றனர்.

தற்போது சரக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளதால் வேறு வழியின்றி கால்நடைகளை அவற்றில்தான் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

இவ்வாறு கட்டாய வசூலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement