காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்தாதீங்க!

வால்பாறை; வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்த போலீசார் தடை விதிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு, காந்தி சிலை வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சமீப காலமாக காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக, தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை்களில் கட்சிக்கூட்டம் நடத்தப்படுவதால், பஸ்கள் காந்திசிலை வளாகம் வருவதில்லை. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எஸ்டேட் தொழிலாளர்கள் அதிகளவில் வால்பாறை நகருக்கு வருகின்றனர். அப்போது, காந்தி சிலை வளாகத்தில் கட்சியினர் கூட்டம் நடத்துவதால், பஸ்கள் காந்திசிலை வருவதில்லை.

இதனால், வாரத்தில் ஒரு நாள் வால்பாறைக்கு வந்து பொருட்கள் வாங்கி செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, காந்தி சிலை வளாகத்தில் கட்சிக்கூட்டம் நடத்த போலீசார் நிரந்தமாக தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement