வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி

கவுகாத்தி: இந்தியாவின் சிக்கன் நெக் பகுதி எனப்படும் வழித்தடம் பற்றி கருத்து கூறிய வங்கதேசத்திற்கு, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
சிலிகுரி காரிடர் எனப்படும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு குறுகிய நிலப்பகுதியாகும். இது வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் பகுதியாக இருப்பதால், 'சிக்கன் நெக்' என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
இந்த சூழலில், சிக்கன் நெக் பகுதி குறித்து வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் கூறியதாவது; வங்காள விரிகுடாவின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம் தான். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது, எனக் கூறினார். மேலும், சீனாவுக்கு 4 நாள் பயணமாக சென்ற அவர், சீனாவின் பொருளாதார செல்வாக்கை தங்கள் நாட்டிற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமில்லாமல், சிலிகுரி காரிடாரில் இரண்டாம் உலகப் போர் கால விமானத் தளத்தை மீண்டும் புதுப்பிக்க வங்கதேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தின் இந்த செயலுக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தியாவின் சிக்கன் நெக் பகுதி குறித்து கருத்து தெரிவித்து வரும் வங்கதேசம், தங்களின் 2 சிக்கன் நெக் பகுதிகள் இருப்பதை மறந்து விட வேண்டாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருபவர்கள் இந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். வங்கதேசம் 2 சிக்கன் நெக் பகுதிகளை கொண்டுள்ளது. அவை இரண்டுமே ரொம்ப பாதிக்கப்படக் கூடியவை.
முதலாவது 80 கி.மீ., வடக்கு வங்கதேச வழித்தடம். டாக்கின் தினாஜ்பூரிலிருந்து தென்மேற்கு காரோ மலைகள் வரையில் உள்ளது. இங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும், முழு ரங்பூர் பிரிவையும் வங்கதேசத்தின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்திவிடும்.
இரண்டாவது தெற்கு திரிபுராவில் இருந்து வங்காள விரிகுடா வரையிலான 28 கி.மீ., சிட்டகாங் வழித்தடம். இந்தியாவின் சின்னஞ்சிறு பாதையை விட சிறியதாக இருக்கும் இந்த வழித்தடம், வங்கதேசத்தின் பொருளாதார தலைநகருக்கும், அரசியல் தலைநகருக்கும் இடையிலான ஒரே இணைப்பாகும்.
சிலர் மறந்துவிடக்கூடிய புவியியல் உண்மைகளை மட்டுமே நான் முன்வைக்கிறேன். இந்தியாவின் சிலிகுரி வழித்தடத்தைப் போலவே, நமது அண்டை நாடும் இரண்டு குறுகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.




