மின் பணியாளர் வீட்டில் கார் திருடிய இருவர் கைது

நெகமம்; நெகமம் வடசித்துாரைச்சேர்ந்தவர் முஸ்தபா, 53, மின்வாரிய பணியாளர். இவர் கடந்த வாரம் குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்குச்சென்று விட்டு வீடு திரும்பிய போது, இவரது வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார், காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, நெகமம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, கார் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பல்லடம் -- உடுமலை ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் காரில் இருந்த பல்லடத்தைச் சேர்ந்த முகமது அஷரப், 28 மற்றும் நந்தகுமார், 27 ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இது திருடப்பட்ட கார் என்பதும் அது முஸ்தபா உடையது என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement