ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி திறன்மிகு தொழிலாளராகலாம்

திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கமும், நிப்ட்-டீ கல்லுாரியும் இணைந்து,ஆடை உற்பத்தி சார்ந்த பகுதி நேர பயிற்சி வகுப்பை செயல்படுத்திவருகின்றன. முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில் பயிற்சி மையம் இயங்கிவருகிறது.

அப்பேரல் மெர்ச்சன்டைசிங், பேட்டர்ன் மேக்கிங்கில் 'மேனுவல்' மற்றும் 'கேட்' மென்பொருள், குவாலிட்டி கன்ட்ரோல், ஓவர் லாக், பிளாட் லாக் மற்றும் பவர் சிங்கர் உள்ளிட்ட டெய்லரிங் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

இதுவரை, ஐந்து பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்துள்ளன. தற்போது ஆறாவது பயிற்சி வகுப்பில், அப்பேரல் மெர்ச்சன்டைசிங் அண்டு குவாலிட்டி கன்ட்ரோல், பேட்டர்ன் மேக்கிங், அப்பேரல் டிசைன் அண்ட் பேட்டர்ன் மேக்கிங் ஆகிய மூன்றுவகையான பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

வேலைக்கு செல்வோருக்கு

ஞாயிறு மட்டும் பயிற்சி

பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:

இதுவரை, ஆண், பெண் 75 பேர் பயிற்சி முடித்தநிலையில், 60 பேர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்துவருகின்றனர்.

ஏற்கனவே ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய தொழில் முனைவோர் மற்றும் வேலை தேடுவோர் பயிற்சியில் சேரலாம்.

தினமும் காலை, 7:00 முதல், 8:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வேலைக்குச்செல்வோர் வசதிக்காக, வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் வகுப்பு நடத்தப்படுகிறது. தினசரி வகுப்பில் இணைவோருக்கு, 3 மாதங்களும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்படும் வகுப்பில் இணைவோருக்கு ஆறு மாதமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு, 78451 84962, 95979 14182 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு

பயிற்சி பெறுவோரின் ஆடை உற்பத்தி திறன் மேம்படுகிறது. நிறுவனங்களுக்கு திறன் மிகு தொழிலாளர் கிடைப்பதோடு, தொழிலாளர்களும் சிறந்த சம்பளத்தில் பணியில் சேரமுடிகிறது. பயிற்சி முடிப்போருக்கு, சான்று வழங்குவதோடு, வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.

- மணியன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்.

Advertisement