குழந்தையுடன் தற்கொலைக்கு முயற்சி மகன் பலி; தாய், மகளுக்கு சிகிச்சை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கணவர் இறந்த விரக்தியில் குழந்தைகளுக்கு பிஸ்கட்டில் ஆசிட் கலந்து கொடுத்து, பெண் தற்கொலைக்கு முயன்றதில் மகன் பலியானார்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அருகே கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கீதா 40. இவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த சம்பத் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் முடிந்து, சஷ்டிகா 7 என்ற மகளும், சர்வேஸ்வரன் 3, என்ற மகனும் உள்ளனர். கணவர் சம்பத்திற்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது குழந்தைகளுடன் புதுப்பட்டியில் உள்ள தந்தை வீட்டில் சங்கீதா வசித்து வந்தார். கணவர் உயிரிழந்த விரக்தியில் மன உளைச்சலில் இருந்துள்ளார். மே 25ஆம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கும், பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் ஆசிட்டை பிஸ்கட்டில் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.

நள்ளிரவு ஒரு மணிக்கு சங்கீதா, குழந்தைகள் வாந்தி எடுத்த நிலையில் அவரது பெற்றோர் மூவரையும் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மகன் சர்வேஸ்வரன் இறந்துள்ளார். ஆபத்தான நிலையில் சங்கீதா திருச்சி தனியார் மருத்துவமனையிலும், சஷ்டிகா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement