டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு


பொறியாளர்கள் பணியிட மாற்றத்தில் எழுந்துள்ள புகாரால், பொதுப்பணித் துறையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


பொதுப்பணித் துறை வாயிலாக, பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்வதற்கு செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் வாயிலாக, திட்ட மதிப்பீடுகளும் தயாரிக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரர்களிடம் கட்டுமான பணிகள் வழங்கப்பட்டு, அவற்றை கண்காணிக்கும் பணியில், உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

ஆர்வம்



ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிலும், மானிய கோரிக்கை தாக்கலின்போதும், பல்வேறு கட்டுமான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் பணிபுரிய பொறியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் வாயிலாக பணியிட மாற்றம் பெற்று, அந்த புதிய பணியிடத்திற்கு வருகின்றனர்.


கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இந்த நடைமுறை அதிகரித்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கையில் பொதுப்பணித் துறை இருந்ததால், பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில், சட்டசபையில் பல்வேறு துறைகளுக்கான கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றை செயலாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. பள்ளி, கல்லுாரி விடுமுறை காலம் என்பதால், விருப்ப பணியிடமாற்றம் பெறும் நடவடிக்கைகளில், பல பொறியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, பொதுப்பணித் துறையில், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற பணியிடமாற்ற பட்டியலை மொத்தமாக வெளிப்படையாக வெளியிட வேண்டும் என, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு உள்ளார். அதை மீறி, தனித்தனியாக ஒவ்வொரு நபருக்கும், 'டிரான்ஸ்பர் ஆர்டர்' வெளியிடப்பட்டு வருகிறது.

மறுப்பு



இதில், பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு குறைவாக உள்ளவர்களும் மாற்றப்பட்டு உள்ளனர். செல்வாக்கான இடத்தை பெறவும், அதே இடத்தை தக்க வைக்கவும், 6 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக, ஒரு தரப்பினரால் புகார் கூறப்படுகிறது. இதையெல்லாம், துறையின் மேலதிகாரிகள் மறுத்துள்ள போதிலும், இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் சங்க நிர்வாகிகள் வாயிலாக, முதன்மை தலைமை பொறியாளரிடமும், அமைச்சரிடமும் முறையிட தயாராகி வருகின்றனர்.


- நமது நிருபர் -

Advertisement