உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஜெர்மனி ; அதிபர் மெர்ஸ் எடுத்த முடிவு

பெர்லின்: ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்க உதவுவதாக ஜெர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் உறுதியளித்தார்.


ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்த தாக்குதலை எதிர்கொள்ள தங்களின் ஆதரவு நாடுகளிடம் ராணுவ உதவிகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவி வழங்கி வரும் ஜெர்மனியின் உதவியை நாடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றுள்ளார். மேலும் ராணுவ ஆதரவை பெறும் விதமாக, புதிய அதிபர் பிரீட்ரிச் மெர்ஸை, ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்பின் போது, நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்க உதவுவதாக பிரீட்ரிச் மெர்ஸ் உறுதியளித்தார். மேலும், இதன் பயன்பாட்டில் எந்த வரம்பும் விதிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டிருப்பது. இது இருநாடுகளுக்கு இடையேயான போரை தீவிரப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நேட்டோ அரசுகள், உக்ரைனுக்கு வழங்கிய மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களில் தூரம் மற்றும இலக்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காரணம், ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால், போர் விரிவடைந்து விடும் என்ற அபாயத்தினால் நேட்டோ நாடுகள் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்தன.


ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அந்தக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் தளர்த்தும் முடிவை எடுத்து வருகின்றன.

Advertisement