முதல்வர் சொல்வது பச்சை பொய்: விடாமல் தாக்குகிறார் நடிகர் விஜய்

சென்னை : 'பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
அண்ணா பல்கலை மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தி.மு.க., நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று, தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம். இவ்வழக்கில் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக, தி.மு.க.,வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, கவர்னர் ரவியை சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், கோரிக்கை மனு வழங்கினேன். பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால், முதல் தகவல் அறிக்கை வெளியானது.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, 25 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.
தொடர்ந்து, இவ்வழக்கை துரிதமாக விசாரிக்க, கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னரே, ஜனவரி 5ம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பிப்ரவரி 24ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளி என்று, மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் தோல்வி காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து,
இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், ஐந்து மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.
இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழக காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றி பச்சைப் பொய்யை, தி.மு.க., தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காக தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை, நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க பெண்கள் பக்கம் நின்று சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











மேலும்
-
பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுரை
-
மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
-
இபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு
-
நைஜீரியாவில் வெள்ளம்; 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்!
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மீறிய சீனா: டிரம்ப் கண்டனம்