கீழடி விவகாரம்: மத்திய அரசு விளக்கம்

சென்னை: கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியதாக வெளியான தகவலை மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.



சிவங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, கீழடியில், 2014 முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அது பற்றிய, 982 பக்க விரிவான ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் சமர்ப்பித்தார்.



அதை, இந்திய தொல்லியல் துறை வெளியிடாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக, லோக்சபாவில் தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியுள்ளது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

இது தொடர்பாக, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு, இந்திய தொல்லியல் துறை எழுதியுள்ள கடிதம்: கி.மு., 5ம் நுாற்றாண்டு முதல் 8ம் நுாற்றாண்டு வரையிலான காலகட்டத்திற்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுகிறது. அனைத்து விபரங்களும் அறிவியல்பூர்வமாக பெறப்பட வேண்டும். சில வரைபடங்களும், சில விபரங்களும் தெளிவாக இல்லை. இரண்டு தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி, அறிக்கையில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதற்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அகழ்வாராய்ச்சியாளர்களால் அகழாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
கீழடி அறிக்கையிலம் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அறிக்கை , நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
அதன்படி கீழடியின் அகழ்வாராய்ச்சியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை. கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. இது இந்திய தொல்லியல் துறையை மோசமான கையில் சித்தரிக்கக்கூடிய நோக்கத்தை கொண்டுள்ளது. இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement