பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா

11


பகோட்டா: பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா அரசு. இந்தியா எம்.பி.,க்கள் குழுவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.


காங்கிரஸ் எம். பி., சசி தரூர் தலைமையில் பா.ஜ., தெலுங்கு தேசம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் குழு, அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளுக்கு சென்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கி வருகிறது.


அந்த வகையில், கொலம்பியாவில் பார்லிமென்ட் உறுப்பினர்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர். அப்போது,"இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானைத் தாக்கிய பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்த கொலம்பிய அரசாங்கத்தின் எதிர்வினையில் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம்.


பயங்கரவாதிகளுக்கு பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இது மோசமான செயல்" என சசிதரூர் அதிருப்தி தெரிவித்திருந்தார். தற்போது, பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்த முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.


இந்திய எம்.பி.,க்கள் குழுவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. கொலம்பிய அரசின் அறிக்கை திரும்பப் பெறப்பட்டதை அறிந்து இந்தியா மகிழ்ச்சியடைகிறது என சசிதரூர் தெரிவித்துள்ளார்.

Advertisement