அசத்தல் பந்துவீச்சு.. அதிரடி பேட்டிங்; பைனலில் பெங்களூரு அணி

முல்லான்பூர்: பிரீமியர் தொடரின் இறுதிபோட்டிக்கு முதல் அணியாக பெங்களூரு அணி தகுதி பெற்றது.


18 வது பிரீமியர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில், பஞ்சாப் அணி, பெங்களூரு அணி, குஜராத் அணி, மற்றும் மும்பை அணியும் முறையே 4 இடங்களை பிடித்து இறுதிபோட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.


இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடந்த இறுதிபோட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணியும், 2வதுஇடம் பெற்ற பெங்களூரு அணியும் மோதியது.


டாஸ் வென்ற பெங்களூரு அணி, பீல்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
பிரியான்ஷ் ஆர்யா 5 பந்துகளில் 7 ரன் எடுத்து அவுட்டானார்.அடுத்து பிரப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 18 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்தது.

சுயாஷ் சர்மா,ஹேசல்வுட் பந்துவீச்சில் திணறல்:



அடுத்த வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடினார். அவரும் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். ஷாஷாங் சிங் வந்த வேகத்தில் 3 ரன்களில் வெளியேறினார்.

முஷீர் கான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ஹர்பிரீத் ப்ரார் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதியில் ஒமர்ஷாய் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி, 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணியின் ஹே சல்வுட், சுயாஷ் சர்மா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


102 ரன் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக, பில் சால்ட், விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடினர். விராட் கோஹ்லி, 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தபோது ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் பில் சால்ட் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வழங்கினார். இருந்தபோதும் அவர் 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

பில் சால்ட் அரை சதம்:



சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 56 எடுத்தார்.

அவருடன் பட்டிதார் இணைந்து 15 ரன்கள் சேர்க்க பெங்களூரு அணி, 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஜூன் 3 அன்று நடைபெறும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்றது.

தோல்வியடைந்த பஞ்சாப் அணி, இன்று(மே 30) நடைபெறும், மும்பை - குஜராத் போட்டியில், வெற்றி பெறும் அணியுடன் மோதும். அதில் வெற்றி பெறும் அணி, 2வது அணியாக பைனலுக்கு முன்னேறும்.

Advertisement