திருப்பூரில் ரூ.7 லட்சம் கோடி பண பரிவர்த்தனை; கடந்த நிதியாண்டை விட 35.77 சதவீதம் அதிகம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2024 - 25 நிதியாண்டில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 639 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டைவிட, 35.77 சதவீதம் அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது.

நம் நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. தேசிய பேமென்ட் கார்பரேஷன், யு.பி.ஐ., எனப்படும் ஒருகிணைந்த பண பரிவர்த்தனை தரவு தொழில்நுட்பத்தை செயல்படுத்திவருகிறது. இரு வங்கி கணக்குகளுக்கு இடையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை இது எளிமைப்படுத்துகிறது.

என்.பி.சி.ஐ., என் பீம் மற்றும் பேடிஎம், போன்பே, கூகுள்பே உள்பட பல தனியார் நிறுவன மொபைல் செயலிகளும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கைகொடுத்துவருகின்றன. வங்கி கணக்கு விவரங்கள் இன்றி, ஒருவரின் மொபைல் எண், யு.பி.ஐ., முகவரி, க்யூ.ஆர்., கோடு ஸ்கேன், டெபிட், கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்வதன் வாயிலாக, மிக எளிதாக பணம் அனுப்ப முடிகிறது. இதனால், வர்த்தகர்கள், பொதுமக்கள், டிஜிட்டல் வழி பண பரிவர்த்தனையில் ஆர்வம்காட்டிவருகின்றனர்.

நாட்டின் பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில், பெரிய வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, பெட்டிக்கடை, மளிகை, பேக்கரி, இறைச்சி, மீன் கடை உள்பட அனைத்து குறு, சிறு, நடுத்தர வர்த்தகர்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர். இதனால், திருப்பூர் மாவட்டத்தில், பீம், யு.பி.ஐ., - பீம் ஆதார், பாரத் க்யூ.ஆர்., கோடு, ஐ.எம்.பி.எஸ்., - கிரெடிட், டெபிட் கார்டு, இணைய இணைப்பு இன்றி பணம் அனுப்பும் யு.எஸ்.எஸ்.டி., ஆகிய வழிகளிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது.

கடந்த 2023 - 24 நிதியாண்டில், மாவட்டத்தில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 466 லட்சம் கோடியாக இருந்தது. இது, கடந்த 2024 - 25 நிதியாண்டில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 639 லட்சம் கோடியாக, முந்தைய நிதியாண்டைவிட, 35.77 சதவீதம் அதிகரித்துள்ளது. பீம் - யு.பி.ஐ., வாயிலாக மட்டும் 4 லட்சத்து 97 ஆயிரத்து 193 கோடி ரூபாய் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பீம் - ஆதார் வாயிலாக, 36.51 கோடி, பாரத் க்யூ.ஆர்., கோடு வாயிலாக, 75.97 கோடி, ஐ.எம்.பி.எஸ்.,-ல், 2 லட்சத்து 1,527 கோடி; கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஸ்வைப்பிங் வாயிலாக, 7,602.39 கோடி, யு.எஸ்.எஸ்.டி., ல், 204.03 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

வங்கியாளர்கள் கூறுகையில், ''டிஜிட்டல் பண பரிவர்த்தனையில், தொகை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படுவதால், வரி ஏய்ப்பு தடுக்கப்படும்; நேர்மையான வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்.

ஆன்லைன் பரிவர்த்தனையில் மோசடிகளும் நடக்கின்றன. டிஜிட்டல் பண பரிவர்த்தனை சார்ந்த சைபர் குற்றங்கள் தொடர்பாக, வர்த்தகர்கள், பொதுமக்கள் மத்தியில், வங்கிகளும், போலீசாரும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது அவசியம்,'' என்றனர்.

Advertisement