பீளமேட்டில் திட்டச்சாலை உருவாக்க ஐகோர்ட் உதவியை நாடும் பொதுமக்கள்

கோவை, : கோவை பி.எப்., அலுவலர் குடியிருப்பு வழியாக, திட்டச்சாலை உருவாக்குவது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள், ஐகோர்ட் உதவியை நாட முடிவு செய்துள்ளனர்.

கோவை பீளமேட்டில், பி.எப்., அலுவலர் குடியிருப்புகள், 40 அடி திட்டச்சாலை உருவாக்காமலும், வரைபட அனுமதி பெறாமலும் கட்டப்பட்டன. திட்டச்சாலை அமைக்கக்கோரி, 'பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பினர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்றனர்.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேரில் ஆய்வு செய்து, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க, நிதி ஒதுக்கக்கோரி, உள்ளூர் திட்ட குழுமத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இச்சூழலில், பி.எப்., அலுவலர் குடியிருப்பு வளாகத்துக்குள், 40 அடி அகலத்துக்கு நிலம் கையகப்படுத்தினால், குடியிருப்பு வரை ரோடு வரும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையை பரிசீலிக்க, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதனால், பி.எப்., அலுவலர் குடியிருப்பு வளாகத்தில், 20 அடியும், தனியார் நில உரிமையாளர்களிடம், 10 அடியும் சேர்த்து, 30 அடி நில ஆர்ஜிதம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. குடியிருப்புக்கு பின்புறமுள்ள நில உரிமையாளர்களில் ஒருவர் நிலத்தை தானமாக மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இருவர் தானமாக வழங்க உறுதியளித்துள்ளனர்.

பி.எப்., அலுவலகத்தில் இருந்து, 20 அடியை தானமாக பெறுவதற்கான முயற்சியை மாநகராட்சி எடுத்து வருகிறது. இச்சூழலில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கீழமை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளார். இதுதொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஐகோர்ட்டில் முறையிட்டு, உத்தரவு பெற முடிவு செய்துள்ளனர். பி.எப்., அலுவலர் குடியிருப்பு வழியாக திட்டச்சாலை அமைந்தால், பாலகுரு கார்டன் வழியாக, எல்லைத்தோட்டம் செல்ல சாலை வசதி கிடைக்கும்.

கோர்ட் உத்தரவு பெற முயற்சி

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'பி.எப்., அலுவலர் குடியிருப்பில் திட்டச்சாலை உருவாக்க, ஐந்து பேரிடம் நிலம் கையகப்படுத்த வேண்டும். நான்கு பேர் நிலத்தை தானமாக வழங்குகின்றனர். ஒருவர் மட்டும் வழக்கு போட்டு இடைக்கால தடை பெற்றுள்ளார். குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஐகோர்ட்டில் முறையிட்டு உத்தரவு பெற முயற்சித்து வருகின்றனர். ஐகோர்ட் உத்தரவு கிடைத்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தி, திட்டச்சாலை உருவாக்கப்படும்' என்றனர்.

Advertisement