தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி வரை மிதமான மழை தொடரும்; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 02) முதல் ஜூன் 8ம் தேதி வரை மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது: மேற்கு திசையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நோக்கி வீசும், காற்றின் வேகத்தில் மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், ஜூன் 8ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 5 வரை, மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வரை, இடையிடையே 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement