திருச்செந்துாரில் சுற்றிய மலேஷிய பெண் சிக்கினார்

திருச்செந்துார்: திருச்செந்துார் முருகன் கோவில் பகுதியில், முறையான ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த மலேஷிய நாட்டு இளம்பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோவில் பகுதியில் சில நாட்களாக சுற்றித்திரிந்த இளம்பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்த அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்.

மலேஷியாவை சேர்ந்த அவர் மெய்தா, 32, என, தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன் உறவினர் ஒருவருடன் தமிழகம் வந்துள்ளார். அவரிடம் பாஸ்போர்ட், விசா என எந்த ஆவணங்களும் இல்லை. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'மலேஷியாவில் பிறந்த மெய்தாவின் பெற்றோர் இறந்ததால், உறவினர் ஒருவருடன் தமிழகம் வந்துள்ளார். தற்போது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால், பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரது உறவினர்கள் குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement