குற்றவாளிகளின் நகை, பணத்தை 'லபக்'கிய போலீஸ் எஸ்.ஐ., கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கொலை குற்றவாளிகளின் நகை, பணத்தை கையாடல் செய்த எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, முல்லை நகரில், 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் இருந்த, கோவை, சோமனுாரை சேர்ந்த வருண்காந்த், 22, என்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை, காப்பக நிர்வாகிகள், ஊழியர்கள் அடித்து கொலை செய்து, தோட்டத்தில் புதைத்தனர்.

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீசார், காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜூ, கவிதா உட்பட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய, 17.5 சவரன் நகை, 1.52 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங்கிற்கு தகவல் கிடைத்தது.

மகாலிங்கபுரம் போலீசார் விசாரித்ததில், அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றிய பணம் மற்றும் நகையை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், கையாடல் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் கையாடலில், போலீஸ் அதிகாரிகள், போலீசார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Advertisement