43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு

7

லக்னோ: உ.பி. சிறையில் இருந்த 104 வயது முதியவர் லகான் லால், 43 ஆண்டு நீதிப்போராட்டத்திற்கு பின் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.

கடந்த 1981ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் தேவாரியா மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கில் லகான் லால் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி அவர் மாநிலத்தின் இருக்கும் கவுசாம்பி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது லகான் லாலுக்கு வயது 61, அந்த நிலையில் அவர், தான் அந்த கொலையை செய்யவில்லை என்று வலியுறுத்தி வந்தார்.


1982ல் ஜாமின் பெற்ற நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர் மீதான கொலை வழக்கு நிலுவையில் இருந்தது.

2015ம் ஆண்டு அவர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மொத்தம் 11 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சிறையில் இருந்தாலும், நூறு வயதைக் கடந்தவர் என்பதால் முன்னுரிமை கொடுத்து வழக்கு நடத்தப்பட்டது.


இந்த வழக்கில் தற்போது, அலகாபாத் நீதிமன்றம், லகான் லால் மீது கொலை குற்றத்திற்கான சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காத நிலையில், விசாரணையில் இருந்த குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, இறுதியாக அவரை குற்றமற்றவராக அறிவித்து, விடுவித்தது. தற்போது லகான் லாலுக்கு வயது 104. இந்நிலையில் அவர் குற்றமற்றவர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கவுசாம்பி மாவட்ட சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தந்தை விடுதலை குறித்து அவரது மகள் ஆஷா கூறுகையில்,மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (டி.எல்.எஸ்.ஏ) அவரது விடுதலையை எளிதாக்கியது. எங்கள் மீது பூசப்பட்ட கறை இறுதியாக நீங்கிவிட்டது. இப்போது தான் எங்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது என்றார்.

Advertisement