பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:

'நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி' என, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், 'தி.மு.க.,வின் நான்காண்டு ஆட்சி, நாடு துாற்றும் ஆட்சியாக உள்ளது' என, மக்கள் பேசுகின்றனர். கடந்த, 2011ல் மின்வெட்டால், தி.மு.க., ஆட்சி பறிபோனது போல, வரும், 2026ல், சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் இந்த ஆட்சி பறிபோகும் என்பது உறுதி. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு காப்பாற்றப்படும். போதை பொருட்கள் இரும்பு கரம் கொண்டு தடுக்கப்படும்.

போதை பொருட்களை தடுக்கிறது இருக்கட்டும்... 'டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்'னு சொல்ல மாட்டேங்கிறாரே!



தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:


துணை முதல்வர் உதயநிதி, 'ஈ.டி.,க்கும் பயப்பட மாட்டோம்; மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என, அமலாக்கத்துறை, 'ரெய்டு' குறித்து சொல்கிறார். கடந்த, 2011ல் சட்டசபை தேர்தல் நடந்த போது, அறிவாலய மாடியில், 'ரெய்டு' நடந்தது; கீழே கூட்டணி பேச்சு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு மட்டும், 'ரெய்டு'க்கு பயந்து பேச்சு நடத்தினரா என தெரியவில்லை.

அப்படி, 'ரெய்டு' நடத்தி தானே, தி.மு.க.,வை மிரட்டி, 63 சட்டசபை தொகுதிகளை காங்கிரசார் வாங்கினாங்க!


தமிழக கனிம வளத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி:


'ஒற்றை விரல் நாயகன்' நடிகர் விஜய் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழக பெண்கள் கெட்டிக்காரர்கள்; உஷாரானவர்கள். யார் நமக்கு பாதுகாப்பு தருகின்றனர் என்றும், யாருடைய ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தருகின்றனர் என்றும் உணர்ந்து ஓட்டளிப்பர்.

தலைநகர் சென்னையின் மைய பகுதியில் இருக்கும், அண்ணா பல்கலை மாணவிக்கே பாதுகாப்பு தர முடியாததையும் பெண்கள் சிந்தித்து பார்த்துட்டா, இவங்களுக்கு சிக்கல் தான்!


அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:


விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை, அரசே கொள்முதல் செய்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு திடீரென தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, 170 கோடி ரூபாய் வரை முன்பணமாக, தி.மு.க., அரசு கொடுத்திருப்பதாக, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. இப்போது, தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை, தி.மு.க., அரசு திடீரென ரத்து செய்துள்ளது. இதனால், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, பல நுாறு கோடி ரூபாய் பணம் வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
'டீலிங்'கில் தனியார் நிறுவனம், ஏதாவது சொதப்பி இருக்குமோ?

Advertisement