மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு

பெங்களூரு: தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது எனக்கூறியதற்கு மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தக்லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை ஒத்திவைப்பதாக கமல் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்றார்.
கமலின், தக் லைப் திரைப்படத்தை வெளியிடுவதில் எந்த இடையூறும் இல்லாத வகையில், மாநில அரசுக்கும், போலீஸ் டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
* கமலஹாசனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி மக்களின் மனதை புண்படுத்தக் கூடாது. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
* கன்னடம் குறித்து பேசிய கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா?
* கமல் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமைதியின்மை ஏற்பட்டு உள்ளது.
* கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா? எதன் அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று பேசினீர்கள்?
* கமல் மன்னிப்பு கேட்டு இருந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து இருக்கும். கமல் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது.
* கர்நாடகாவில் சில கோடிகளை நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் மன்னிப்பு கேட்கலாமே?
* கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். பின்னர் மனு மீண்டும் விசாரிக்கப்படும்.
* பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு ஒன்று மட்டுமே தீர்வு.
* மன்னிப்பு கேட்க முடியாது என கூறும் போது ஏன் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
* நானே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். இந்த விவகாரத்தில் படத்தை பார்க்க முடியாது.
* ரூ.300 கோடி செலவில் படம் எடுக்கப்பட்டதாக கூறும் நீங்கள் மன்னிப்பு கேட்கலாமே?
* மன்னிப்பு கேட்க மதியம் 2.30 மணி வரை கெடு விதிக்கப்படுகிறது. இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
மீண்டும் விசாரணை
இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கமல் அளித்த கடிதம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி நாகபிரசன்னா,
* மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?
* கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். ஆனால், அவர் அளித்த கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே;
* மன்னிப்பு கேட்க சொன்னால் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து கமல் தரப்பு வழக்கறிஞர், தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க முடியும். தவறாக புரிந்து கொண்டால் எப்படி மன்னிப்பு கேட்பது படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம் எனக்கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், கர்நாடக பிலிம் சேம்பர், அரசு கமல் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடன்பாடு ஏற்படும் வரை கர்நாடகாவில் படம் வெளியிடப்படாது எனக்கூறிய நீதிபதி, வழக்கை ஜூன் 10ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.














