ரோட்டில் தேங்கும் கழிவுநீர் வாகனங்கள் செல்ல சிரமம்

காரியாபட்டி,: காரியாபட்டி எஸ்.தோப்பூர் காலனியில் ரோட்டில் கழிவுநீர் தேங்குவதால் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. வாறுகால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரியாபட்டி எஸ்.தோப்பூர் காலனியில் மக்கள் புழக்கத்திற்காக தரைத்தள தொட்டி அமைத்து, குளியல் தொட்டி கட்டப்பட்டது. குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி கிடையாது. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. டூவீலரில் செல்பவர்கள் வழுக்கி விழுகின்றனர். ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை. ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலமுறை வலியுறுத்தினர். யாரும் கண்டுகொள்ளவில்லை.

விபத்து ஏற்படுவதற்கு முன் ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். வாறுகால் வசதி ஏற்படுத்தி கழிவுநீரை ஓடையில் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement