கர்நாடகாவின் ஆதிவாசி சமூகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்

கர்நாடகாவின் மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் ஆதிவாசி சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். மலை தேன் விற்பது; விவசாயம் செய்வது இவர்கள் பிரதான தொழிலாக உள்ளது.

ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லை. கல்வி கற்க சரியான பள்ளி கூடங்கள் இல்லை. பஸ் வசதி இல்லை. இந்த தடையை எல்லாம் தாண்டி முனைவர் பட்டம் பெற்று அசத்தி உள்ளார் ஆதிவாசி சமூகத்தின் ரத்னம்மா. தற்போது தனது சமூகத்தினரை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் பணிகளை செய்கிறார்.

இதுகுறித்து ரத்னம்மா கூறியதாவது:

கர்நாடகாவில் ஆதிவாசி சமூகத்தில் இருந்து, முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண், நான் தான் என்று சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முனைவர் பட்டம் எனக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. சிறிய வயதில் கல்வி கிடைக்க நிறைய கஷ்டப்பட்டு உள்ளேன். சரியான பஸ் வசதி கூட எனது கிராமத்திற்கு கிடையாது. பல நாட்கள் நடந்தே பள்ளிக்கு சென்றேன். வாழ்க்கையில் நம்மை முன்னேற்றுவது கல்வி தான் என்று பெற்றோர் அடிக்கடி என்னிடம் சொல்வர்.

பள்ளி படிப்பு முடித்த பின், மைசூரில் கல்லுாரி படிப்பை நிறைவு செய்தேன். மைசூரு பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். ஆதிவாசி சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதனால் 'ஸ்ரீபிரகதி பவுண்டேஷன்' என்ற அமைப்பை துவங்கினேன். அரசிடம் இருந்து எங்கள் சமூகத்திற்கு நிறைய சலுகை கிடைக்கிறது. ஆனால் யாருக்கும் தெரிவது இல்லை. எனது அமைப்பின் மூலம், ஆதிவாசி மக்களுக்கு சலுகை கிடைக்க உதவுகிறேன். ஆதிவாசி சமூக குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எனது ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.



- -நமது நிருபர் -

Advertisement