அமரர் ஊர்தி நிறுத்துமிடமாக மாறிய பந்தல்குடி பஸ் ஸ்டாண்ட்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பஸ் ஸ்டாண்ட் செயல்படாமல் போனதால் அமரர் ஊர்தி நிற்கும் இடமாக மாறிவிட்டது.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ஊராட்சி பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கே மதுரை, அருப்புக்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார் செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் வந்து செல்லும். 2007ல், மதுரையில் இருந்து பந்தல்குடி வழியாக நான்கு வழிச்சாலை துாத்துக்குடிக்கு போடப்பட்டது. பந்தல்குடி ஊருக்குள் வராமல் புறவழி சாலையாக அமைந்ததால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்லவில்லை. நாளடைவில் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் காலி செய்யப்பட்டன.

பஸ் ஸ்டாண்டும் பராமரிப்பு இன்றி போனது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் ஸ்டாண்ட் எந்தவித பராமரிப்பு இன்றி உள்ளது. டவுன் பஸ்கள் கூட பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்ட்டில் தற்போது அமரர் ஊர்தி வாகனங்கள், தனியார் சரக்கு வாகனங்கள் நிற்கும் இடமாக மாறிவிட்டது. பந்தல்குடியில் மக்கள் ரோட்டில் நின்று தான் பஸ் ஏறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் பந்தல்குடி பஸ் ஸ்டாண்டை பராமரிப்பு செய்து பஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப்பகுதியில் மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.

Advertisement