7 வயது சிறுமி பரிதாப பலி; டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

மாண்டியா : 'மிம்ஸ்' மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் 7 வயது சிறுமி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

மாண்டியா, மலவள்ளி தாலுகா, நெல்லுார் கிராமத்தில் வசிக்கும் நிங்கராஜூ - ரஞ்சிதா தம்பதி. இவர்களின் மகள் சான்வி, 7. கடந்த 29ம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது, சிறுமியின் காலில் டைல்ஸ் விழுந்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால், மிம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வார்டுக்கு மாற்றப்பட்டார். சிறுமியின் உடல்நிலை சீராக இருந்தது.

போராட்டம்



இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுமியின் உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார் என அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை கேட்டு ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை நிங்கராஜூ, மருத்துவர்களின் அலட்சிய போக்கினால், தன் குழந்தை இறந்தது என கூறி, மருத்துவமனை வளாகத்திற்கு முன் நின்று போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டம் நேற்று வரை தொடர்ந்தது. சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் என பலரும் அவருடன் போராடினர்.

பிரேத பரிசோதனை



நிலைமை மோசமாவதை உணர்ந்த மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதண்டி, சம்பவ இடத்திற்கு வந்தார்.

சிறுமியின் தந்தை நிங்கராஜூ கூறுகையில், ''எனது குழந்தைக்கு, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சிகிச்சை அளித்ததால், என் குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறந்த செய்தி முதலில் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னரே, எனக்கும், என் மனைவிக்கும் தெரிவிக்கப்பட்டது. மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதால், உடலை பிரேத பரிசோதனை செய்ய வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்,'' என்றார்.

மருத்துவமனை இயக்குநர் மூர்த்தி கூறுகையில், ''அறுவை சிகிச்சைக்கு பின், குழந்தையின் உடல்நிலை மோசமானது. அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக, உடலில் உள்ள பல உறுப்புகள் செயலிழந்தன. இதனாலே, அவர் உயிரிழந்தார்,'' என்றார்.

இதை கேட்ட எஸ்.பி., 'மைசூரு கே.ஆர்., மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement