மாவட்டத்தில் ரோடு பணிகள் கிடப்பில்: பொது மக்கள் அவதி

கிராமப்புற சாலைகள் பலவும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் யூனியன் நிர்வாகம் வசம் உள்ளன. பத்து வருடங்களுக்கு மேற்பட்ட சாலைகள், பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்த சாலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிதாக போடப்படுகின்றன.

திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் விலக்கில் இருந்து மாரநாடு விலக்கு வரை 4 கி.மீ., தூரத்திற்கு ரோட்டை புதுப்பிக்க ரூ.1.60கோடி ஒதுக்கினர். இந்த ரோடு மூலம் சலுப்பனோடை, பிச்சைப்பிள்ளையேந்தல், தாழிக்குளம் வழியாக அமைக்க 3 மாதங்களுக்கு முன் பணிகளை துவக்கினர்.

இதற்காக பழைய சாலைகளை அப்புறப்படுத்தினர். அதற்கு பின் ரோடு பணிகளை மேற்கொள்ள வில்லை. இதனால் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதனால் மீண்டும் ரோடு பணிகள் துவங்கின. அந்தபணியும் 10 நாட்களே நடந்தநிலையில் ரோட்டில் ஜல்லி கற்களை பரப்பியதுடன் நிறுத்தி விட்டனர்.

இதனால், இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த ரோடு வழியாக தான் பல்வேறு கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

பணிகள் முடியாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே போன்று திருப்புவனத்தில் இருந்து வெள்ளக்கரை, அல்லிநகரம் வரை பிரதமரின் சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

அந்த ரோட்டிலும் ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளனர்.

அதற்கு பின் பணிகள் நடைபெறவில்லை.

இதனால், வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவித்தனர்.

ரோட்டால் சேதமாகும் வாகனம்



இது குறித்த சலுப்பனோடை பொன்முத்து கூறியதாவது, கிராமத்தில் இருந்து டூவீலர்களில் வேலைக்கு செல்பவர்கள் வழியில் நடந்து செல்பவர்களை டூவீலரில் ஏற்றி சென்று இறக்கி விடுவது வழக்கம். இரண்டு பேர் சென்றால் டயர்கள் பழுதடைவதாக கூறி யாரும் டூவீலரில் ஏற்றிசெல்வது இல்லை. ஷேர் ஆட்டோக்களும் ஊருக்குள் வருவதில்லை, என்றார்.

Advertisement