வயலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தல்

தேனி: ''பருவ மழையில் இருந்து தோட்டக்கலைப் பயிர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்.'' என்ற வழிமுறைகளை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் பழப் பயிர்கள் 19,800 எக்டேர், காய்கறி பயிர்கள் 9,800 எக்டேர் மலைத் தோட்டப் பயிர்கள் 32,900 எக்டேர் சாகுபடியாகிறது.

இது தவிர நறுமணப் பயிர்களான ஏலக்காய், மிளகு 3500 எக்டேர் சாகுபடி ஆகிறது.

பருவமழை காலத்தில் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாக்க சில வழிமுறைகளை விவசாயிகள் பின் பற்றுவது அவசியம். வயல்களில் அதிக நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பருவ மழை நேரத்தில் நீர்ப்பாசனம், உரமிடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

வாழை மரங்கள், ஜாதிக்காய், கொக்கோ செடிகள் காற்றில் சாய்ந்து விடுவதை தவிர்க்க குச்சிகளால் முட்டு கொடுக்க வேண்டும். மா, பலா, கொய்யா, எலுமிச்சை பயிர்களில் காய்ந்த பட்டுப்போன பகுதிகளை அகற்றிட வேண்டும்.

மிளகு, திராட்சை கொடிகளில் வேர் பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திராட்சைக் கொடிகளில் போர்டோ கலவை பசையினை பூச வேண்டும். மிளகு கொடியின் வேர் பகுதியில் பூஞ்சான உயிரியல் கொல்லி மருந்துகளை இட வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

Advertisement