பொது மக்கள் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பின் சீரான மின் சப்ளை மகிழ்ச்சியில் குட்டியாறுவாலி மக்கள்

மூணாறு: மின்கம்பத்தை சரி செய்ய ஊழியர்களுக்காக காத்திருக்காமல் பொது மக்கள் களம் இறங்கியதால், எட்டு நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதால் குட்டியாறுவாலி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூணாறு அருகே குட்டியாறுவாலி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த வாரம் பலத்த காற்றுடன் பெய்த கன மழையில் மின்கம்பம் சேதமடைந்து, குட்டியாறுவாலி பகுதி இருளில் மூழ்கியது.

அதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாட்கள் ஆகியும் மின்கம்பம் சரி செய்யப்படாததால், அப்பகுதி மக்கள் மின்வாரியம் அலுவலகத்தை நாடினர்.

ஊழியர் பற்றாக்குறை, மழை ஆகிய காரணங்களால் மின் கம்பத்தை சரி செய்ய சில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் பதில் அளித்தனர். அது வரை காத்திருக்காமல் குட்டியாறுவாலி பகுதி மக்கள் களம் இறங்கினர். அப்பகுதியைச் சேர்ந்த கணேசன், தாஸ், விஜி ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் ஆறு மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் 6 கி.மீ., துாரம் கான்கிரீட் மின் கம்பத்தை வாகனம் மூலமும் தலை சுமையாகவும் கொண்டு வந்து சரி செய்து உதவினர். பொது மக்களின் முயற்சியால் எட்டு நாட்களாக முடங்கிய மின் வினியோகம், மீண்டும் வழங்கப்பட்டதால் குட்டியாறுவாலி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement