வண்ணம் பூசப்படாத வேகத்தடைகள் மறைமலை நகரில் விபத்து அபாயம்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகர பகுதியில் அண்ணா சாலை, அடிகளார் சாலை, திருவள்ளுவர் சாலை, பாவேந்தர் சாலை, கம்பர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன.

இந்த பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த சாலைகளில் முக்கிய சந்திப்புகளில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வேகத்தடைகளில் வண்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

நகர் பகுதியில் உள்ள வேகத்தடைகள் பெரும்பாலும் வண்ணம் பூசாமல், அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.

குழந்தைகளுடன் செல்லும் போது, வேகத்டையில் தடுமாறி விழுந்து, சிறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே, வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசவும், ஒளிரும் பட்டைகள் அமைக்கவும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement