வாகனங்களில் ரேஷன் சப்ளை: ரத்து செய்தது ஆந்திர அரசு

விஜயவாடா: ஆந்திராவில், வாகனங்களில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை, அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, 2019 - 2025 மே வரை ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்., அரசு, வாகனங்களில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, இந்த திட்டத்தை ரத்து செய்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவிட்டது.

இது குறித்து, ஜனசேனாவைச் சேர்ந்த ஆந்திர பொது வினியோகத் துறை அமைச்சர் என்.மனோகர் கூறியதாவது:

வாகனங்களில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இனி, எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்; அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் இயங்கும்.

ஜெகன் மோகன் ரெட்டியின் முந்தைய அரசு, வீட்டு ரேஷன் வினியோகம் என்ற பெயரில், 17,000 கோடி ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி உள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு, 385 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement