சிறுத்தை நடமாட்டம் தலகட்டபுராவில் கிலி

பெங்களூரு: பெங்களூரு புறநகர், தலகட்டபுராவில் கே.எஸ்.எஸ்.இ.எம்., கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரி எதிரே, 'பூர்விகா வுட் ஒர்க்ஸ்' தொழிற்சாலை அருகில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிறுத்தை நடமாடியது. இதை பார்த்த அப்பகுதியினர் பீதியடைந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, தொழிற்சாலை ஊழியர்கள் நடமாடும் இடத்திலேயே, சிறுத்தை நடமாடியது. எனவே அச்சமடைந்த அப்பகுதியினர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

நேற்று காலையில் அங்கு வந்த வனத்துறையினர், சிறுத்தையை பல இடங்களில் தேடியும் தென்படவில்லை.

சிறுத்தை நடமாடிய இடம் உட்பட மூன்று இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். டிராப் கேமராக்கள் பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர்.

பூர்விகா வுட் ஒர்க்ஸ் தொழிற்சாலை அருகில், புதர் மண்டி கிடக்கிறது. சிறுத்தை அந்த புதருக்குள் பதுங்கி இருக்கலாம் என, மக்கள் கூறியுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தனியாக நடமாட வேண்டாம். சிறு பிள்ளைகளை வெளியே விளையாட அனுமதிக்க கூடாது.

வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தொழிற்சாலை ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement