ரயில்வே மேம்பாலங்கள் பணியை 6 மாதங்களில் முடிக்க திட்டம்

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி நான்குவழிச் சாலையில், தக்கோலம் கூட்டுச்சாலை குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

மேலும், சித்தேரிமேடு, புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் துவங்க உள்ளன. இந்த பணிகள் ஆறு மாதங்களில் முடிக்க ரயில்வே துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இது, 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், வாலாஜாபாத் புறவழிச் சாலையில், உயர் மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் முதல், பரமேஸ்வரமங்கலம் வரையில், 15 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கூட்டு சாலையில் இருந்து, தணிகைபோளூர் வரையில், அரக்கோணம் புறவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இதில், வாலாஜாபாத், தக்கோலம், சித்தேரிமேடு ஆகிய மூன்று இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க சமீபத்தில் அனுமதி அளித்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement