'ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு துாண்டுவதாகாது': உச்ச நீதிமன்றம்

8

புதுடில்லி: 'ஒருவரை திட்டுவது தற்கொலைக்கு துாண்டுவதாகாது' என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மாணவர் ஒருவரை திட்டி தற்கொலைக்கு துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை வழக்கில் இருந்து விடுவித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றின் விடுதி பொறுப்பாளர், அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவர் அளித்த புகாரின்படி, சக மாணவரை திட்டினார். இதனால் மனமுடைந்த அந்த மாணவர், விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில், தற்கொலைக்கு துாண்டியதாக கூறி விடுதி பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுதி பொறுப்பாளரை விடுவிக்க மறுத்தது.

இதை எதிர்த்து, விடுதி பொறுப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 'தற்கொலை செய்த மாணவர், மீண்டும் அதே குற்றத்தை செய்யாமலிருக்கவே, விடுதி பொறுப்பாளர் என்ற முறையில் கடிந்து கொண்டேன். அவருக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இந்த விவகாரத்தை முழுமையாக பரிசீலித்தோம். திட்டுவதால் இவ்வளவு பெரிய துயரம் ஏற்படும் என, எந்தவொரு சாதாரண நபரும் நினைத்து பார்த்திருக்க முடியாது.

சக மாணவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே, தற்கொலை செய்த மாணவரை விடுதி பொறுப்பாளர் என்ற முறையில் கடிந்து கொண்டுள்ளார். இது, தற்கொலைக்கு துாண்டுவதாகாது. வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement