சபாஷ் ஷ்ரேயஸ்... பைனலில் பஞ்சாப்: வெளியேறியது மும்பை அணி

ஆமதாபாத்: பிரிமியர் லீக் பைனலுக்கு பஞ்சாப் அணி முன்னேறியது. தகுதிச் சுற்று-2ல் கேப்டன் ஷ்ரேயஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையின் பைனல் கனவு தகர்ந்தது.
ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் தகுதிச் சுற்று-2ல் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார். மழையால் போட்டி துவங்குவதில் இழுபறி ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக துவங்கிய போட்டியில், ஓவர் எதுவும் குறைக்கப்படவில்லை.


ரோகித் ஏமாற்றம்: மும்பை அணிக்கு 'இம்பாக்ட்' வீரராக வந்த ரோகித் சர்மா (8) ஏமாற்றினார். பின் இணைந்த பேர்ஸ்டோவ், திலக் வர்மா ஜோடி நம்பிக்கை தந்தது. ஜேமிசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பேர்ஸ்டோவ், அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், அஸ்மதுல்லா ஓமர்சாய் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது பேர்ஸ்டோவ் (38) அவுட்டானார்.

திலக் அபாரம்: ஸ்டாய்னிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய திலக், வைஷாக் வீசிய 9வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், சகால் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது சகால் 'சுழலில்' சூர்யகுமார் (44) சிக்கினார். ஜேமிசன் பந்தில் திலக் (44) ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (15) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய நமன் திர், 18 பந்தில் 37 ரன் (7 பவுண்டரி) விளாசினார்.

மும்பை அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்தது. ராஜ் பாவா (8) அவுட்டாகாமல் இருந்தார்.

ஷ்ரேயஸ் நம்பிக்கை: சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (6) ஏமாற்றினார். பவுல்ட் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய ஜோஷ் இங்லிஸ், பும்ரா வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசினர். பிரியான்ஷ் ஆர்யா (20) ஆறுதல் தந்தார். பாண்ட்யா பந்தில் இங்லிஸ் (38) அவுட்டானார். பின் இணைந்த கேப்டன் ஷ்ரேயஸ், நேஹல் வதேரா ஜோடி நம்பிக்கை தந்தது. டாப்லி வீசிய 13வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்டார் ஷ்ரேயஸ். பவுல்ட் வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த வதேரா, அஷ்வனி குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். நான்காவது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த போது அஷ்வனி பந்தில் வதேரா (48) அவுட்டானார். பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷ்ரேயஸ், அரைசதம் கடந்தார்.

அடுத்து வந்த ஷசாங்க் சிங் (2) 'ரன்-அவுட்' ஆனார். அஷ்வனி குமார் வீசிய 19வது ஓவரில் 4 சிக்சர் பறக்கவிட்ட ஷ்யேரஸ் வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 19 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் (87 ரன், 8 சிக்சர், 5 பவுண்டரி), ஸ்டாய்னிஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.



பெங்களூருவுடன் மோதல்


தகுதிச் சுற்று-2ல் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, நாளை (ஜூன் 3) ஆமதாபாத்தில் நடக்கவுள்ள பைனலில் பெங்களூரு அணியை சந்திக்கிறது.



39 சிக்சர்
பிரிமியர் லீக் அரங்கில் ஒரு சீசனில் அதிக சிக்சர் பறக்கவிட்ட பஞ்சாப் அணி வீரரானார் ஷ்ரேயஸ். இம்முறை, 39 சிக்சர் விளாசினார். இதற்கு முன், 2014ல் மேக்ஸ்வெல் 36 சிக்சர் அடித்திருந்தார்.

12வது வீரர்
பிரிமியர் லீக் அரங்கில், ஒரு சீசனில் 700 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த 12வது வீரரானார் சூர்யகுமார். இம்முறை, 16 போட்டியில், 5 அரைசதம் உட்பட 717 ரன் எடுத்துள்ளார். தவிர இச்சாதனை படைத்த முதல் மும்பை அணி வீரர் என்ற பெருமை பெற்றார்.

Advertisement