வேகமெடுக்கும் கொரோனா: 3,758 பேருக்கு பாதிப்பு

புதுடில்லி: நாட்டில் புதிதாக, 363 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 'தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்' என, டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. நம் நாட்டிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த 22ல் நாடு முழுதும் 257 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்த நான்கு நாட்களில், மே 26ல், 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்த ஐந்து நாட்களில் இந்த பாதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுதும் புதிதாக 363 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 1,400, மஹாராஷ்டிராவில் 485, டில்லியில் 436, குஜராத்தில் 320, மேற்கு வங்கத்தில் 287 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் 238, தமிழகத்தில் 199, உத்தர பிரதேசத்தில் 147, ராஜஸ்தானில் 62 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஒரே நாளில், நான்கு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கேரளா, கர்நாடகாவில் தலா ஒருவரும், மேற்கு வங்கத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இதயநோய் உள்ளிட்ட பிற இணை நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், அது குறித்து கவலைப்பட வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் ராஜிவ் பெஹல் கூறுகையில், ''ஒமைக்ரான் வைரசின் துணை வகைகளான எல்.எப்., 7 - எக்ஸ்.எப்.ஜி., - ஜே.என்., 1 - என்.பி. 1.8.1 ஆகியவற்றின் பரவல் காரணமாகவே நாடு முழுதும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது.
''நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். இருப்பினும், எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்,'' என்றார்.
மேலும்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
-
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
-
போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்