ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

புதுடில்லி: டில்லியில் உள்ள வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குநராக அமித் குமார் சிங்கால் பணியாற்றி வந்தார். 2007ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., பிரிவு அதிகாரியான இவர், சமீபத்தில் தனிநபர் ஒருவர் மீது எழுந்த வருவாய் புகார் குறித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த நபரிடம், வருமான வரி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, தனக்கு 45 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அளிக்கவில்லை எனில் வழக்கு பாயும், அபராதம் செலுத்த நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, முதற்கட்டமாக 25 லட்சம் ரூபாயை, பஞ்சாபின் மொஹாலியில் உள்ள தன் வீட்டில் உதவியாளர் ஹர்ஷ் கோத்தக்கிடம் வழங்கும்படி, அந்த நபரிடம் அமித் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்படி வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், புகார் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அளித்து, அவரது உதவியாளர் ஹர்ஷ் கோத்தக்கை கையும் களவுமாக பிடித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, அமித் குமாரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement