தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: அமைச்சர் மகேஷ்

18

சென்னை: “மத்திய அரசிடம் இருந்து பணம் வந்த பின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:



ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில், மூன்று அல்லது நான்கு மாத தாமதத்திற்கு பின், 13 வகை கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.


இந்த முறை 1,141 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை, பள்ளி துவங்கும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.



கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வர வேண்டிய 600 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மத்திய அரசிடம் கடந்த மாதம் நேரடியாக வலியுறுத்தி உள்ளோம்.



இப்பிரச்னைக்கு தீர்வு காண, முதல்வரின் ஆணைப்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.



இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்து, மத்திய அரசிடம் இருந்து பணம் வந்தபின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கட்டணமின்றி சேர்க்கப்படுவர். கடந்தாண்டுகளில் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் மோதல் சம்பவங்கள் அரங்கேறின.



நடப்பு கல்வியாண்டில் இப்பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், பள்ளி திறந்த முதல் வாரத்தில், மாணவர்களுக்கு மனரீதியான வாழ்வியல் திறன் சார்ந்த வகுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.



மாநில கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை முதல்வரிடம் உள்ளது. விரைவில் அதை அவர் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement