பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு

10

பெங்களூரு: '' கர்நாடக காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்'', என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.


@1brபிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பைனலில் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க வந்த வீரர்களை பார்ப்பதற்காக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


இதற்கு மன்னிப்பு கோரி உள்ள அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அளவுகடந்த ரசிகர்கள் கூட்டத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் தடியடி நடத்த முடியவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தும் உயிரிழப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.


இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில், ' முதல்வரும், துணை முதல்வரும் செல்பி எடுப்பதிலேயே கவனம் செலுத்தினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. உரிய முன்னேற்பாடு செய்யாமல் அவசரப்பட்டு விட்டது. பொறுப்பு அற்ற நிர்வாகத்தால் 11 பேர் உயிரிழந்து விட்டனர்' எனத் தெரிவித்து உள்ளது.


பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், அவசர அவசரமாக வெற்றி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு முன்னேற்பாடு செய்யவில்லை. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.,வைச் சேர்ந்த சலவாடி நாராயணசுவாமி கூறுகையில், '' அரசால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எத்தனை பேர் வருவார்கள் ? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பாதுகாப்பில் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement